எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

ஒரு நட்பான உரையாடல்

கேத்ரீனும், நானும் சிறந்த பள்ளிபருவ நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசுவதோடு, இரவில் யார் வீட்டில் தங்குவதென்று வகுப்பில் துண்டுக் குறிப்புகளை அனுப்பிக் கொள்வோம். சிலநேரம் வாரயிறுதி நாட்களை ஒன்றாகக் கழித்து, பள்ளி வேலைகளை இணைந்து செய்வோம்.  

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், கேத்ரீனை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அன்று காலை என் சபை போதகர் நித்திய வாழ்வைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆனால் நான் வேதத்தை நம்புவதைப் போல, அவள் வேதத்தை நம்பவில்லை. நான் பாரப்பட்டு, அவளை அழைத்து இயேசுவோடு எப்படி உறவுகொள்வது என்பதைக் குறித்து அவளுக்கு விளக்க விரும்பினேன். ஒருவேளை நான் சொல்வதை அவள் நிராகரித்து, என்னுடனான சிநேகிதத்தை விட்டு விலகிவிடுவாளோ என்றும் தயங்கினேன்.

இந்த பயமே நம்மில் அநேகரை அமைதியாய் இருக்கச் செய்கிறது. பவுல் அப்போஸ்தலனும் கூட, “நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு” (எபேசியர் 6:20) “எனக்காய் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று ஜனங்களிடம் கேட்க வேண்டியிருந்தது. நற்செய்தியைப் பகிர்வதில் எந்த ஆபத்தும் இல்லை. எனினும், பவுல் தன்னை தேவனுடைய சார்பில் நின்று பேசக்கூடிய “ஸ்தானாதிபதி” (வச.19) என்கிறார். நாமும் அப்படித்தான். ஜனங்கள் நம்முடைய செய்தியை நிராகரித்தால், அந்த செய்தியை நம்மிடம் கொடுத்தனுப்பியவரை நிராகரிக்கின்றனர் என்று அர்த்தம். நம்முடைய நிராகரிக்கப்படுதலை நம்மோடு சேர்ந்து தேவனும் அனுபவிக்கிறார்.

ஆகவே, எது நம்மை பேசத் தூண்டுகிறது? தேவனைப் போலவே நாமும் மக்கள் மீது அக்கறையோடிருக்கிறோம் (2 பேதுரு 3:9). கேத்ரீனை துணிந்து கூப்பிடுவதற்கு இதுவே எனக்கு உந்துதலாயிருந்தது. ஆச்சரியப்படும்படி அவள் எனக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, நான் சொன்னதைக் கவனமாக கேட்டாள். என்னிடம் சில கேள்விகளும் கேட்டாள். அவள் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் வேண்டி, அவருக்காய் வாழத் தீர்மானித்தாள். என்னுடைய துணிச்சலான முயற்சி பலனளித்தது.

ஜெயமும் தியாகமும்

ஒரு கோடை விடுமுறை வகுப்பில், என் மகன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனை குறித்து புத்தகம் ஒன்றில் படித்தான். அச்சிறுவனுடைய பெரும்பாலான நேரம் இந்த இலட்சியத்திற்கு பயிற்சியெடுக்கவே செலவானது. இறுதியில் அவனுக்கான நேரம் கைகூடிவரும்போது, காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மலையேற்றத்தில் ஒரு இடத்தில அவனுடைய குழுவிலிருந்த ஒருவன் நோய்வாய்ப்பட, தன் இலக்கை அடைவதற்கு பதிலாக அவனோடு தங்கியிருக்க தீர்மானிக்கிறான்.

வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர், "இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அந்த மலையை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?" என கேட்டார். ஒரு மாணவன் "ஆம் ஏனெனில் தோல்வி என்பது அவனுடைய இரத்தத்திலேயே ஊறியுள்ளது" என்றான். ஆனால் இன்னொரு பிள்ளை இதை மறுத்தது. அச்சிறுவன் தோற்கவில்லை ஏனெனில் அவன் முக்கியமான ஒன்றை மற்றவருக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தான் என்று காரணம் சொன்னான்.

நாம் நம்முடைய திட்டங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக அக்கறை கொள்ளும்போது, நாம் இயேசுவை போல நடக்கிறோம். எங்கும் பயணித்து தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இயேசு சொந்த வீடு, நிரந்தர வருமானம் மற்றும் சமுதாய அங்கீகாரம் ஆகியவற்றை தியாகம் செய்தார். இறுதியாக, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து தேவனுடைய அன்பை காண்பிக்க தன் ஜீவனையே விட்டுக்கொடுத்தார் (1 யோவான் 3:16)

உலக பிரகாரமான ஜெயமும், தேவனுடைய பார்வையில் உள்ள ஜெயமும் அதிக வித்தியாசம் கொண்டவைகள். பிற்படுத்தப்பட்டோரையும், காயப்பட்டோரையும் மீட்க நம்மை உந்தித்தள்ளும் மனஉருக்கத்தை அவர் அதிகமாக மதிப்பீடுகிறார் (வ.17). ஜனங்களை காப்பாற்றும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனுடைய உதவியோடு, நாம் நமது மதிப்பீடுகளை அவருடைய மதிப்பீடுகளோடு இசையும்படிச் செய்து அவரையும், மற்றவர்களையும் நேசிக்க நம்மையே ஒப்புக்கொடுப்பதே எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

நான் என்ன சொல்ல வேண்டும்?

பழைய புத்தகக்கடையொன்றில் நான் புத்தகங்களை பார்வையிடுவதை நிறுத்தியபின்பு, அந்த கடையின் முதலாளி வந்தார். அவரிடத்தில் இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளைக் குறித்து நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சத்தியத்தைக் கேட்க விரும்புவாரா என்று என் உள்மனதில் எண்ணிக்கொண்டேன். நான் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக மௌனமாக ஜெபித்தேன். கிறிஸ்தவ ஆசிரியர்களின் சரிதை புத்தகங்களைக் குறித்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. அதைக் குறித்து விவாதிக்கும்போது, அப்படியே தேவனைக் குறித்தும் பேசினோம். ஒரு சிறிய ஜெபம் எங்களுடைய விவாதத்தை ஆவிக்குரிய ரீதியில் திசைதிருப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினேன். 

அர்தசஷ்டா ராஜாவின் முன் நின்று பேசுவதற்கு முன்பு நெகேமியாவும் தேவனிடம் ஜெபித்துவிட்டு போகிறான். எருசலேமின் அழிவைக் குறித்து கலக்கமடைந்திருந்த நெகேமியாவுக்கு எப்படி உதவமுடியும் என்று ராஜா கேட்கிறார். நெகேமியா ராஜாவின் வேலைக்காரனாயிருக்கிறான், ஆகையால் ராஜாவின் தயவை அவன் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவனுக்கு பெரிய தேவை ஒன்று உள்ளது. அவன் எருசலேமை மீட்க விரும்புகிறான். ஆகையால் அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தன் பட்டணத்தை ஸ்தாபிக்க அனுமதி கேட்பதற்கு முன்பு “பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபிக்கிறான் (நெகேமியா 2:4-5). ராஜா அதற்கு சம்மதித்து, நெகேமியாவுக்கு உதவி செய்யவும் தீர்மானித்து, அவனுடைய பயண ஏற்பாடுகளை செய்து, அவனுக்கு தேவையான மரமுட்டுகளையும் கொடுத்தனுப்புகிறார்.

“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபிக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது (எபேசியர் 6:18). நமக்கு தைரியம், சுய கட்டுப்பாடு தேவைப்படும் மற்றும் நாம் உணர்ச்சிவசப்படும் தருணங்களும் இதில் உள்ளடங்கும். நாம் பேசுவதற்கு முன்பாக ஜெபிப்பது, நம்முடைய சிந்தனையையும் வார்த்தைகளையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு உதவுகிறது. 

உங்களுடைய வார்த்தைகளை அவர் இன்று எவ்வாறு வழிநடத்த விரும்புகிறார்? அவரைக் கேட்டு அதை கண்டறியுங்கள்!

சிறந்த ஆசிரியர்

“எனக்கு இது விளங்கவில்லை!” என் மகள் பென்சிலை மேஜையின் மீது குத்தினாள். அவள் தன்னுடைய கணக்குப் பாடத்தை செய்துகொண்டிருந்தாள். நான் வீட்டில் அவளுக்கு ஆசிரியையாகவும் தாயாகவும் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் குழம்பினோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த பின்னங்களின் எண் இலக்கத்தை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. என்னால் அவளுக்கு அதை கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் அதை விளக்கும் ஆன்லைன் ஆசிரியரின் காணொலியைப் பார்த்தோம். 

மனிதர்களாகிய நாம் சிலவேளைகளில் சிலவற்றை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவோம். ஆனால் தேவன் அப்படியல்ல அவர் சகலமும் அறிந்தவர். ஏசாயா, “கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?” (ஏசாயா 40:13-14) என்று கேட்கிறார். அதற்கு பதில்? யாருமில்லை!

மனிதன் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபடியால் மனிதனுக்கு ஞானம் உண்டு. ஆனால் நம்முடைய ஞானம் கொஞ்சமானது; அதற்கு எல்லை உண்டு. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் அறிந்தவர் (சங்கீதம் 147:5). தொழில்நுட்பத்தின் துணையோடு இன்று நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். எனினும், நாம் தவறு செய்யக்கூடும். ஆனால் இயேசு எல்லாவற்றையும் “துரிதமாகஒரே நேரத்தில்முழுமையாய்சரியாய்” அறிந்தவர் என்று ஓர் இறையியல் வல்லுநர் கூறுகிறார். 

எத்தனை மனிதர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாய் தெரிந்தாலும், கிறிஸ்துவின் எல்லாம் அறிந்த குணாதிசயத்திற்கு ஈடாக முடியாது. அவர் நம்மோடு இருந்து நம்முடைய புரிதலை ஆசீர்வதித்துஎது சரிஎது நல்லது என்று நமக்கு கற்றுத் தருவது அவசியமாயிருக்கிறது.

மகிழ்ச்சியான கற்றல்

இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.

“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).

இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது. 

இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?

பரம வைத்தியர்

என் குடும்ப நபர் ஒருவரின் உணவுசெரிமான கோளாறுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நன்றாய் பலனளிக்கத் துவங்கியதை அறிந்ததும் நான் ஆச்சரியத்தோடு, அதைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாக பேசினேன். அந்த சிகிச்சையை கொடுத்த மருத்துவரை புகழ்ந்தேன். “சுகத்திற்கு எப்போதுமே தேவன் தான் காரணராக முடியும்” என்று என் சிநேகிதரில் சிலர் சொன்னார்கள். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது. பரம வைத்தியரை முக்கியத்துவப்படுத்தாமல், சுகத்திற்கு மனிதனை விக்கிரகமாக்கிவிட்டேனோ?

இஸ்ரவேலர்களின் வியாதியை சுகமாக்க தேவன் பயன்படுத்திய வெண்கல சர்ப்பத்திற்கு தூபங்காட்ட துணிந்தபோது இஸ்ரவேலர்களும் ஏறத்தாழ இதே வலையில் சிக்கினர். “மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை” (2 இராஜ. 18:4) எசேக்கியா உடைத்துப்போடும் வரைக்கும் இஸ்ரவேலர்கள் அதை வழிபட்டுக்கொண்டிருந்தனர். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கொடிய விஷப்பாம்புகள் இஸ்ரவேலர்களை தீண்டியது. அதினால் பலர் மரிக்க நேரிட்டது (எண்ணாகமம் 21:6). அவர்களுடைய ஆவிக்குரிய முரட்டாட்டமே அதற்கு காரணம் என்றாலும் மக்கள் தேவனுடைய உதவிக்காய் கெஞ்சினர். அவர்களுக்கு இரக்கம் செய்யும்பொருட்டு, தேவன் மோசேக்கு ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து அதை எல்லோரும் பார்க்கும்பொருட்டு உயர்த்தி பிடிக்கும்படி சொன்னார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (வச. 4-9). 

தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை நினைத்துப் பாருங்கள். அவைகளில் ஏதாகிலும் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பிரதிபலிப்பதற்கு பதிலாக நம்முடைய துதிக்கு பாத்திரமாய் மாறியிருக்கிறதா? நன்மையான எந்த ஈவையும் கொடுக்கும் (யாக்கோபு 1:17), நம்முடைய பரிசுத்த தேவன் மட்டுமே துதிக்குப் பாத்திரர். 

தேவனை கனப்படுத்தத் தீர்மானித்தல்

லியோ டால்ஸ்டாயின் “குடும்ப சந்தோஷம்” என்னும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான செர்ஜே, அழகும் இளமையும் நிறைந்த மாஷாவை சந்திக்கிறார். வயதில் மூத்தவரான செர்ஜே, உலகம் சுற்றும் ஒரு வியாபாரி. ஆனால் மாஷா உலகமறியாத ஒரு கிராமத்துப் பெண். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, பின் திருமணம் செய்துகொள்கின்றனர். 

திருமணத்திற்குப் பின் ஒரு கிராமத்தில் குடியேறுகின்றனர். அந்த கிராம சுற்றுப்புறத்தைப் பார்த்து மாஷா மிகவும் சலிப்படைந்திருக்கிறாள். அதை அறிந்த செர்ஜே, செயின்ட் பீட்டர்ஸ்பர்கை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்கிறான். அங்கே மாஷாவின் அழகும் வசீகரமான தோற்றமும் அவளுக்கு திடீர் புகழை தேடித்தருகிறது. அங்கிருந்து வீடு திரும்பும் நேரம் வந்தபோது, அந்த ஊரின் இளவரசர் மாஷாவை சந்திக்க விரும்பி அங்கு வருகிறார். செர்ஜே, அவளைக் கட்டாயப்படுத்தி தன் ஊருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். ஆனால், அவளையே தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுகிறான். அவள் அங்கேயே தங்க தீர்மானிக்கிறாள். அவளின் துரோகம் செர்ஜேயின் இருதயத்தை உடைத்தது. 

செர்ஜேயைப் போன்று அவருக்கு உண்மையாய் இருக்கும்படிக்கு, தேவனும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. அவர் நம்மை நேசிப்பதால் அவருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நம்மிடத்திலேயே கொடுக்கிறார். அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கான பலியாக ஏற்றுக்கொண்டதே நாம் அவருக்கு சாதகமாய் எடுத்த முதல் தீர்மானம் (1 யோவான் 4:9-10). அதற்கு பின்பு, வாழ்நாள் முழுவதும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆவியன் நடத்துதலின்படி, தேவனுக்கு உண்மையாய் இருக்க தீர்மானிக்கிறோமா? அல்லது உலகம் நம்மை ஆளுகை செய்ய அனுமதிக்கிறோமா? தாவீது, அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு மனிதன் இல்லை. ஆனால், “கர்த்தருடைய வழிகளைக்” கைக்கொண்டதாகவும் அதின் மூலம் நல்ல பலனை அடைந்ததாகவும் அடிக்கடி குறிப்பிடுகிறார் (சங்கீதம் 18:21-24). நம்முடைய தீர்மானங்கள் தேவனை கனப்படுத்தும்போது, “தயவுள்ளவனுக்கு.. (அவர்) தயவுள்ளவராக” வெளிப்படுகிறார் என்று தாவீது சொன்ன ஆசீர்வாதத்தை நாமும் அனுபவிக்க முடியும். 

நமது பிரச்சனையைக் காட்டிலும் பெரியவர்

டைனோசர்கள் வாழ்ந்த நாட்களில் அது எப்படி இருந்திருக்கும்? பெரிய பற்கள்? செதில் தோல்கள்? நீண்ட வால்? ஒரு ஓவியர் இந்த பெரிய உயிரினத்தை பெரிய ஓவியமாகத் தீட்டினார். 20அடி உயரமும் 60அடி அகலமும் கொண்ட அந்த சுவரோவியம், கைதேர்ந்த நபர்களால் சாம் நோபுள் ஒக்லஹோமா உயிரியல் பூங்காவில் கவனத்துடன் பொருத்தப்பட்டது.

அந்த பெரிய உருவத்திற்கு முன் நிற்கும் எவருக்கும் தாங்கள் வெகு சிறியவர்கள் என்ற உணர்வு ஏற்படும். “பிகெமோத்” என்னும் பெரிய மிருகத்தைக் குறித்து வேதாகமத்தில் வாசிக்கும்போது எனக்கும் அதே உணர்வுதான் ஏற்படுகிறது (யோபு 40:15). இந்த பெரிய மிருகம் மாட்டைப்போல் புல்லைத் தின்கிறது. அதின் எலும்புகள் இரும்பு கம்பிகள் போலிருக்கிறது. அதின் வாலை கேதுரு மரத்தைப் போல் நீட்டுகிறது. அது மலைகளில் மேய்ந்து, சதுப்பு நிலங்களில் படுத்துக்கொள்கிறது. நதிகளின் வெள்ளம் புரண்டுவந்தாலும் அது பயப்படாது. 

இந்த வியக்கத்தக்க உயிரினத்தை அதை உண்டாக்கியவரைத் தவிர்த்து யாராலும் கட்டுப்படுத்த முடியாது (வச. 19). இதை, கடினமான உபத்திரவத்தின் பாதையில் யோபு நடக்கும்போது தேவன் அவனுக்கு நினைப்பூட்டுகிறார். யோபு தேவனிடத்தில் கேள்வி கேட்பதற்கு முன்பு, வேதனை, குழப்பம், விரக்தி, என்று பல கடினமான பாதைகளின் ஊடாய் கடந்து வருகிறான். ஆனால் அவைகளின் உண்மையான உருவத்தை தேவனுடைய பதில் யோபுக்கு காண்பித்தது. யோபின் பிரச்சனைகளைக் காட்டிலும் தேவன் பெரியவர்; யோபைக் காட்டிலும் அந்த பிரச்சனைகளை அவரால் நேர்த்தியாய் கையாள முடியும் என்பதை யோபுக்கு உணர்த்தப்படுகிறது. கடைசியில், “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்பதை யோபு ஒப்புக்கொண்டான்.

மீண்டும் செழிக்க

போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால், கலிபோர்னியாவின் காட்டுப்பூக்கள் விளையும் பகுதிகளான ஆன்டெலோப் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிகியூரோவா மலை போன்றவை செழிப்பாக இருக்கும். ஆனால் வறட்சி ஏற்பட்டால் என்ன ஆகும்? விஞ்ஞானிகள் சில காட்டுப்பூக்கள் மண்ணின் வழியாக முளைத்து பூக்க அனுமதிக்காமல், அவற்றின் விதைகளை பெருமளவில் நிலத்தடியில் சேமித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வறட்சிக்குப் பிறகு, தாவரங்கள் தாங்கள் சேமித்த விதைகளைப் பயன்படுத்தி மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.

பண்டைய இஸ்ரவேலர் கடுமையான நிலைமைகளை மீறி எகிப்து தேசத்தில் செழித்து வளர்ந்தனர். அடிமைகளாயிருந்த இவர்களை வயல்களில் வேலை செய்யவும் செங்கற்களை தயாரிக்கவும் எகிப்தியர்கள் கட்டாயப்படுத்தினர். இரக்கமற்ற இந்த எகிப்திய கண்காணிகள், பார்வோனுக்கு முழு நகரத்தையும் கட்டுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தினர். எகிப்தின் மன்னர் சிசுக்கொலையை நடைமுறைப்படுத்தினான். ஆயினும், தேவன் அவர்களை பாதுகாத்ததால், “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்திராகமம் 1:12). பல வேத அறிஞர்கள் இஸ்ரவேலின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மக்கள் தொகை எகிப்தில் இருந்த காலத்தில் இரண்டு மில்லியனாக (அல்லது அதற்கு மேற்பட்டதாக) இருந்தது என்று மதிப்பிடுகின்றனர்.

அப்போது தம் மக்களைப் பாதுகாத்த தேவன், இன்றும் நம்மை ஆதரிக்கிறார். எந்த சூழலிலும் அவர் நமக்கு உதவ முடியும். இன்னொரு கடினமான சூழ்நிலையை சகித்துக்கொள்வது பற்றி நாம் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டு புல்லுக்கு” தேவன் கரிசனையுடன் இருந்தால் நம் தேவைகளை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (மத்தேயு 6:30).